Thursday, 13 August 2015

திருஆடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்

திருஆடானை (திருவாடானை) திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர் : ஆதிரத்தினேசுவரர், ஆடானைநாதர்,
இறைவியார் திருப்பெயர் : அம்பாயிரவல்லி. 
தல மரம்  : வில்வம்
தீர்த்தம்   : சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், 
     அகத்திய தீர்த்தம், வருண தீர்த்தம்.
வழிபட்டோர்  : பிருகு முனிவர், சூரியன்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - மாதோர் கூறுகந் (2-112).
thiruadanai temple

தலவரலாறு

  • ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற வருணன் மகன் வாருணி, சாபம் நீங்கப் பெற்ற பதி.
  • நீலமணியை லிங்கமாக ஸ்தாபித்து, சூரியன் பேறு பெற்றான்.
  • பிற பெயர்கள்: பாரிசாத வனம், வன்னிவனம், ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுத்தீச்சரம் முதலான பன்னிரண்டு.

சிறப்புகள்

  • திரிபுவனச் சக்கரவர்த்தி கல்வெட்டு ஒன்று, சுந்தர பாண்டியனின் இரு கல்வெட்டும், மேலும் ஒன்றும் ஆக நான்கு உள்ளது.











ஆலயம் பற்றி :


இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.
பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும்,பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம்
...திருசிற்றம்பலம்...

No comments:

Post a Comment